புதுடெல்லி: ‘வழிபாட்டு தலங்கள் சட்டமானது, ஒரே மதத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையேயான பிரச்னையில் பொருந்தாது’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகான, அனைத்து வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை பராமரிக்க வகை செய்யும் வகையில், ‘வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991’ கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் எந்த வழிபாட்டுத் தலத்திலும் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ மதமாற்றம் செய்வதைத் தடை செய்கிறது. இந்நிலையில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மதப் பிரச்னை தொடர்பான வழக்கில், வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், பர்திவாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், ‘ஒரே மதத்தை சேர்ந்த இரு பிரிவுகளுக்கு இடையேயான பிரச்னையில் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை அமல்படுத்த முடியாது. எனவே அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32ன் கீழ் இந்த மனுவை ஏற்க நீதிமன்றம் விரும்பவில்லை. அதே சமயம், சிவில் சட்டத்தின் கீழ் மனுதாரர்கள் அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். அவர்கள் சிவில் சட்டத்தின் கீழ் தீர்வு காணலாம்,’ என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்….