வளமான எதிர்காலம் தரும் கிருத்திகை விரதம்!

?என் மகனும் ஒரு பெண்ணும் காதலித்து வந்தார்கள். பெண்ணின் பெற்றோருக்குத் தெரிந்து அவர்கள் தங்கள் மகளை அடித்துக் கண்டித்துள்ளார்கள். நான் என் மகனை வெளியூருக்கு அனுப்பிவிட்டேன். அந்தப்பெண் தற்கொலை செய்துகொண்டு விட்டாள். இது தெரிந்த என் மகன் தானும் அவளிடமே சென்று சேர்ந்து விடுவதாக அழுகிறான். பெண் வீட்டார் என் மகனையும் என் கணவரையும் கொலை செய்துவிட வேண்டும் என்ற கோபத்தில் உள்ளார்கள். இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட உரிய பரிகாரம் கூறுங்கள்.- கமலம்.உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. 21 வயதிற்குள் காதல், காதலி தற்கொலை, இதனால் மன உளைச்சல், உயிர் பயம் என்று ஏகப்பட்ட பிரச்னைகளை உங்கள் மகன் சந்தித்து வருகிறார். உங்கள் ஜோதிடர் சொல்வதுபோல அவருடைய நேரம் தற்போது அத்தனை உசிதமாக இல்லை. அவர் வெளியூரிலேயே தனக்குரிய தொழிலை அமைத்துக் கொள்வது நல்லது. இது அந்தப் பெண்ணின் பெற்றோர் மீதான பயத்தின் காரணமாக என்று கருத வேண்டாம். ஒரு சிறிய ஊருக்குள் எந்தப்பக்கம் திரும்பினாலும் அந்தப் பெண்ணின் நினைவு தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். மேலும், அந்தப் பெண்ணின் சாவுக்கு தான்தான் காரணம் என்ற உங்கள் மகனின் குற்ற உணர்வும் நியாயமானதே. தெரிந்தோ தெரியாமலோ அந்தப் பெண்ணின் அகால மரணத்திற்கு இவரும் ஒரு காரணமாகிவிட்டார். அந்தப் பாவம் நிச்சயமாக இவரைத் தொடர்ந்து கொண்டிருக்கும். அதற்குரிய பிராயச்சித்தம் கண்டிப்பாக இவர் செய்தாக வேண்டிய சூழலில் உள்ளார். இவருடைய ஜாதக பலத்தின்படி உத்யோகம் மற்றும் வாழ்வு என்பது தொலைதூரத்தில்தான் அமையும். ஆக, உள்ளூரில் இருப்பதை விட வெளியூரில் தன்னுடைய தொழிலை அமைத்துக் கொள்வது நல்லது. தற்போதைய கிரஹ நிலையின்படி உறவினர் ஒருவரிடம் இவர் சுயதொழில் செய்ய கற்றுக் கொள்வது நல்லது. 12.01.2023க்குப் பின் சொந்தமாக தொழில் செய்வார். இவர் சொந்தமாக சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் தொடர்ந்து 21 மாதங்களுக்கு மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் அருகிலுள்ள அம்மன் கோயிலில் விசேஷ அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு வர வேண்டும். அதன் பின்னர்தான் அவர் தனது திருமணத்தைப்பற்றி யோசிக்க இயலும். அதோடு ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி பெண் ஒருவரை இவர் திருமணம் செய்வதன் மூலம் தெரிந்தோ தெரியாமலோ தனக்கு உண்டான சாபம் மற்றும் பாவத்திலிருந்து விமோசனத்தையும் பெற இயலும். மகனின் உயிர் மட்டுமல்ல, உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீங்களும் உங்கள் கணவரும் வெளியூருக்குச் சென்று உங்கள் வாழ்க்கையைத் தொடர்வதே நல்லது. அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள வீடாக பார்த்துக் குடிபோவது உசிதமானது. தினந்தோறும் அம்மன் வழிபாடும் துர்க்கைக்கு பூஜை செய்து வருவதால் மட்டுமே இந்தப் பிரச்னையிலிருந்து உங்களால் விடுபட இயலும். நடந்ததைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் இனி நடக்க வேண்டியதில் கவனம் செலுத்துங்கள். அம்பிகையின் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.?என் மகள் வழி பேத்திக்கு இன்னும் திருமணமாகவில்லை. எத்தனையோ ஜாதகம் பார்த்தோம். இன்னும் முடிவாகவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?- நடராஜன், கோயமுத்தூர்.கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய செவ்வாய் பத்தில் சூரியன், புதன், சனியுடன் இணைந்திருப்பதால் தோஷம் எதுவும் இல்லை. ஏழில் சந்திரன் நீசம் பெற்றிருப்பதால் திருமணம் சற்று தாமதமாகி வருகிறது. என்றாலும் நல்ல வரனாகவே அமையும். பேத்தியின் ஜீவன ஸ்தானம் என்பது வலிமையாக உள்ளது. அவரது உத்யோகம்பற்றி நீங்கள் உங்கள் கடிதத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. தற்போதைய கிரகநிலையின்படி அவருடைய உத்யோகம் அல்லது தொழிலை ஸ்திரப்படுத்திக் கொள்ள நேரம் நன்றாக உள்ளது. நல்ல சம்பாத்தியம் என்பது உங்கள் பேத்திக்கு உண்டு. வாழ்க்கைத்துணைவர் உங்கள் பேத்தியின் உத்யோகம் அல்லது தொழில் சார்ந்த நபராக இருப்பார். உங்கள் மருமகனின் பெயரைக் கொண்டு பார்க்கும்போது ஈரோடு மாவட்டம், அந்தியூரில் அமைந்துள்ள குருநாதசுவாமி அவர்களுடைய குலதெய்வமாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஏதேனும் ஒரு அஷ்டமி நாளில் குருநாத ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதுடன் வனப்பகுதியில் அமைந்துள்ள ஆலயத்திற்கும் சென்று சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்லுங்கள். 21.10.2021க்குள் பேத்தியின் திருமணம் விமரிசையாக நடந்தேறும்.?23 வயதாகும் என் ஒரே மகள் ஆயுர்வேத மருத்துவம் படித்தவர். தனுசு ராசி, மூல நட்சத்திரத்தில் பிறந்த பி.இ. சிவில் படித்த பையனை காதலிப்பதாகக் கூறுகிறாள். அந்தப் பையன் ஏற்கெனவே வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து காதல் தோல்வி கண்டவர். அப்படியிருந்தும் என் மகள் அந்தப் பையனையே விரும்புகிறாள். என்ன செய்வது என்று தெரியவில்லை. உரிய வழி காட்டுங்கள்.- வாசகி, சென்னை.ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. சிம்ம லக்னத்தில் பிறந்தவர் என்பதாலும் ஜென்ம லக்னத்திலேயே செவ்வாய் மற்றும் ராகுவின் இணைவினைப் பெற்றிருப்பதாலும் சற்று பிடிவாத குணம் கொண்டவராக இருக்கிறார். திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் கேதுவின் அமர்வும் ஏழாம் வீட்டின் அதிபதி சனி எட்டில் அமர்ந்திருக்கும் நிலையும் இதுபோன்ற பிரச்னையைத் தந்திருக்கிறது. தற்காலம் நடந்து வரும் தசையின் காலத்தில் உங்கள் மகளின் திருமணத்தை நடத்துவது என்பது உசிதமில்லை. மூலம் நட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்திருக்கும் அந்தப் பையனைத் திருமணம் செய்வது என்பதும் அவருக்கு நல்லதொரு வாழ்வினை அமைத்துத் தராது. உங்கள் மகள் அமாவாசை நாளில் பிறந்தவர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். திருமண விஷயத்தைப் பொறுத்த வரை எந்தச் சூழலிலும் அவருடைய தற்போதைய முடிவிற்கு சம்மதம் தெரிவிக்காதீர்கள். அவருடைய நல்வாழ்வு கருதி சிறிது காலம் பொறுத்திருக்கச் சொல்லுங்கள். திருமணம் பற்றிய பேச்சையே தற்போது எடுக்க வேண்டாம். அவருடைய ஜாதகத்தில் உத்யோக ஸ்தானம் என்பது பலமாக உள்ளது. அதனை மனதில் கொண்டு அவருடைய உத்யோகத்தை நிலைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துங்கள். பத்தாம் பாவக அதிபதி சுக்கிரன் 11ல் அமர்ந்திருப்பதால் சிறப்பான சம்பாத்யம் என்பது அவருக்கு நிச்சயம் உண்டு. 27வது வயது முடிவுறும் தருவாயில் திருமணம் செய்வதே அவருடைய வாழ்விற்கு நல்லது. தற்போது அவர் விரும்புவதாக சொல்லும் நபர் பற்றிய எண்ணமும் சிந்தனையும் இன்னும் சிறிது காலம் கழித்து மறந்துவிடும். செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். மாதந்தோறும் வரும் கிருத்திகை நாளில் உங்கள் மகளை விரதம் இருக்கச் சொல்லுங்கள். திருமண விஷயம் மட்டுமல்லாது அவரது வளமான எதிர்காலத்திற்கும் கிருத்திகை விரதம் என்பது சிறப்பான பலனைத் தரும்.திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா…

Related posts

அனைவருக்கும் பொருளாதாரம் சீராக பரிகாரம்

அனைவருக்கும் பொருளாதாரம் சீராக பரிகாரம்

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை