கீழ்வேளூர்,மே6: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் இருதய கமலநாத சாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு (கடந்த 2022ம் ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 15ம் தேதி) தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இந்த வருடம் சித்திரை திருவிழா ஏப்ரல் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் சோமஸ்கந்தர், அம்பாள் உள்ளிட்ட சாமிகள் எழுந்தருளினர். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய 4 வீதிகள் வழியாக சென்று தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் பூமிநாதன், ஊராட்சி தலைவர்கள் மணிகண்டன், ரேவதி அய்யப்பன், கோவில் பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம வாசிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.