வலங்கைமான், செப். 17: வலங்கைமான், சேணியர் தெருவில் குடிநீர் குழாய் பொருத்தப்பட்ட பகுதியில் அடிக்கடி சிக்கும் கனரக வாகனங்களால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் இருந்து நாகப்பட்டினம் பகுதிக்கு குடிதண்ணீர் கொண்டு செல்லும் விதமாக பாபநாசம் வலங்கைமான் சாலை வழியாக சாலையின் பக்கவாட்டில் இயந்திரத்தின் உதவியுடன் 5 அடி ஆழத்திற்கு மேலாக பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தப்பட்டன.
இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதுமே புழுதி மூட்டமாக காணப்படுகிறது. குடியிருப்பு வாசிகள் மற்றும் வர்த்தக நிறுவனத்தின் பெரிதும் பாதித்து வருகின்றனர். இந்நிலையில், சேணியர் தெரு பகுதியில் நேற்று காலை கும்பகோணம் தனியார் பள்ளி வாகனம் ஒன்று குழாய்கள் பொருத்தப்பட்ட பள்ளத்தில் சிக்கியது. அதனையடுத்து, அன்று மாலை மற்றொரு டேங்கர் வாகனம் பள்ளத்தில் சிக்கியது.
தொடர்ந்து அவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள் குழாய்கள் பொருத்தப்பட்ட பள்ளங்களில் மாட்டிக் கொள்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பாக இப்பிரச்சனைக்கு உரிய நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.