டெல்லி : நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான அட்டவணையில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ள மாநிலங்கள் குறித்து நிதி ஆயோக் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில் 3வது ஆண்டாக வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் 86 மதிப்பெண்களை பெற்று தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இதில் கேரளா,ஆந்திரா , கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சாதனைக்கு மாவட்ட அளவில் சிறந்த வளர்ச்சி நிர்வாகத்தைக் கொண்டு இருப்பதே காரணமாக அறியப்படுகிறது. சுகாதார அமைப்பு மிகவும் திறமையாக இருப்பதால் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களின் பலன்கள் பயனாளிகளை பெரிய அளவில் சென்று அடைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 12 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கொரோனா தொற்று காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், மாநிலத்தில் உணவு பாதுகாப்பது உறுதி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இத்திட்டத்தில் பெண்களே பெரும்பான்மையான பயனாளிகளாக இருப்பதால், ஊதியத்தின் பெரும்பகுதி உணவுப் பொருட்களுக்கு செலவிடப்பட்டதை நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதும் வறுமை ஒழிப்பிற்கு ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு இயக்கம் தமிழ்நாட்டில் மிகவும் வலுவாக உள்ளது என்றும் வறுமையை அடையாளம் காணுதல் மற்றும் வறுமையை குறைப்பதில் அதன் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். தமிழ்நாடு 10 ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருவதை சுட்டிக் காட்டியுள்ள நிபுணர்கள் சுகாதார செலவுகளால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வறுமையில் தள்ளப்படும் சூழல்களை இத்திட்டம் குறைத்துள்ளதாக கூறியுள்ளனர். தமிழக அரசின் இலவச அரிசி திட்டமும் வறுமை ஒழிப்பில் முக்கிய பங்காற்றி இருப்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. …