வைகுண்டம், மே 31: வை. கள்ளபிரான் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கருடசேவை நடந்தது. நவதிருப்பதிகளில் முதலாவதான வைகுண்டம் கள்ளபிரான் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த வைகாசி மாதம் திருவோணம் நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம். இந்நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம் நடந்தது. 9.30 மணிக்கு பூர்ணாகுதி, 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 11 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், மதியம் 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு சுவாமி கள்ளபிரான் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். 8.30 மணிக்கு கருட வாகனத்தில் காட்சி, வீதியுலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், நாராயணன், அனந்த பத்மநாபன், சீனு, ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், வாசன், திருவேங்கடத்தான், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் அருணாதேவி, கொம்பையா, மாரியம்மாள் சண்முகசுந்தரம், முருகன், முத்துகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், ஆய்வாளர் நம்பி, உபயதாரர் பிரகாஷ், சீனிவாச அறக்கட்டளை பாலாஜி பத்மநாபன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.