டெல்லி: வருமான வரித்துறை உள்பட பல அரசு முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்து வாங்கியதில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் ராபர்ட் வதேரா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வருமான வரித்துறை நேற்று முன்தினம் அவரிடம் 8 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது. இந்நிலையில், அவரை விசாரணைக்காக நேற்று அலுவலகம் வரும்படி வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் கொரோனோ கட்டுப்பாடுகளை சுட்டிக் காட்டி அவர் விசாரணைக்கு செல்லவில்லை. பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வதேராவின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லி சுக்தேவ் விகார் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; வருமான வரித்துறை உள்பட பல அரசு முகமைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உணர்கிறேன். மத்திய அரசு என்னை இலக்காக குறி வைத்து விசாரணையின் போது கேள்விகள் கேட்கப்பட்டன. வருமான வரித்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். வருமான வரித்துறை விசாரணையின் போது அதிகாரிகளிடம் 2,300 ஆவணங்களை அளித்தேன் என கூறினார். அப்போது அவரிடம் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது நாட்டை வழிநடத்திச் செல்லும் திறன் ராகுல் காந்திக்கு உள்ளது; காங்கிரஸ் தலைவராக அவரே வர வேண்டும் என கூறினார். …