வருமானம் அதிகரிக்க தினை பயிரிடலாம் வேளாண்துறை அட்வைஸ்

மதுரை, செப். 7: விவசாயிகள் தங்கள் வருமானம் அதிகரிக்க தினை பயிரிடலாமென வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள தினை எளிதாக பயிரிடலாம். இதன்படி தினை பயிரிட கோ – 6, கோ(தி) 7 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். புரட்டாசி பட்டம் ஏற்ற பருவம் ஆகும். செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் உகந்ததாகும். பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். வரிசை விதைப்பாக இருந்தால் 1 ஹெக்டேருக்கு 10 கிலோ விதைக்க வேண்டும். தூவுவதாக இருந்தால் 1 ஹெக்டேருக்கு 12.5 கிலோ விதைக்க வேண்டும். 22.5 சென்டி மீட்டருக்கு 7.5 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைக்க வேண்டும்.

1 ஹெக்டேருக்கு தேவையான விதையளவிற்கு 600 அசோபாஸை அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் 1 ஹெக்டேருக்கு 2 கிலோ அசோபாஸை மணல் மற்றும் 25 கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மக்கிய தொழுஉரத்தை கடைசி உழவின்போது பரப்பி பிறகு நிலத்தை உழ வேண்டும். 1 ஹெக்டேருக்கு முறையே 44:22 கிலோ தழை மற்றும் சாம்பல் சத்துக்களை இட வேண்டும். இந்தப் பயிரை பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. அதனால் பயிர்ப் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கதிர்கள் நன்கு காய்ந்து, இலைகள் பழுத்தவுடன் அறுவடை செய்து, களத்தில் காயவைத்து அடித்து தானியங்களைப் பிரித்து சுத்தம் செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அந்தந்தப் பகுதி வேளாண் அலுவலர்களை ெ்தாடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்