தஞ்சாவூர், செப்.30: வரி வசூலில் தஞ்சாவூர் மாநகராட்சியை முதலிடத்துக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணக்குமார் கரூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக இருந்த மகேஸ்வரி தஞ்சாவூர் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையராக ஆர்.மகேஸ்வரி பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தஞ்சாவூர் மாநகராட்சியின் மூன்றாவது ஆணையராக பொறுப்பேற்றுள்ளேன். மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், கடந்த முறை பணியாற்றிய ஆணையர் விட்டு சென்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். வரி வசூலில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் தஞ்சாவூர் மாநகராட்சி 18வது இடத்தில் உள்ளது. இன்னும் 5 மாதங்களில் முதல் இடத்துக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.