வரி, அபராதமாக ₹4.37 கோடி வசூல்

தர்மபுரி, ஏப்.6: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 2022-2023ம் நிதியாண்டில், மொத்தம் 57,500 வாகனங்கள் தணிக்கை செய்து, ₹4.37 கோடி வரி, அபராதம் வசூலித்து வட்டார போக்குவரத்து துறை அரசுக்கு வருவாய் ஈட்டியுள்ளது.
தர்மபுரியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பாலக்கோடு, அரூரில் பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஒரு வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில், 5 மோட்டார் வாகன ஆய்வாள்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் கட்டுப்பாட்டில், தொப்பூர் கணவாய் – காரிமங்கலம் வரை, மஞ்சவாடி கணவாய் – நரிப்பள்ளி வரையும், பாலக்கோடு – காடுசெட்டிப்பட்டி வரை என மாவட்டம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் இவர்கள் அடிக்கடி வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2022 -2023-ம் நிதியாண்டில், போக்குவரத்து துறை சார்பாக வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 57,500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 6608 வாகனங்களுக்கு அறிக்கைகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் டூவீலர்கள், ஆட்டோ, அரசு மற்றும் தனியார் பஸ், மினி சரக்கு வாகனங்கள், லாரி, தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் என 3 லட்சத்திற்கு மேல் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் மற்றும் வெளியூர் மாநில வாகனங்கள் வரி செலுத்தப்பட்டுள்ளதா? என தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன தணிக்கை செய்து வருகிறோம். ஆர்டிஓ தாமோதரன் தலைமையில், மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து பறக்கும் படை ஆய்வாளர் கதிர்வேல், தர்மபுரி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அதில், 57500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 6608 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 828 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 220 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 145 வாகனங்களுக்கும், அனுமதிச்சீட்டு இல்லாமல் இயக்கிய 283 வாகனங்களுக்கும், அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 3425 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய 475 வாகனங்களுக்கும், காப்புச்சான்று, புகைச்சான்று இல்லாமல் இயக்கிய 1432 வாகனங்களுக்கும், சிகப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாமல் இயக்கிய 589 வாகனங்களுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 392 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் போது அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சோதனையின் மூலமாக, அரசுக்கு சாலை வரியாக ₹2 கோடியே 42 ஆயிரத்து 793 மற்றும் இணக்க கட்டணமாக ₹1 கோடியே 13 லட்சத்து 76 ஆயிரத்து 718 என மொத்தம் ₹3 கோடியே 14 லட்சத்து 19 ஆயிரத்து 511 உடனடியாக வசூலிக்கப்பட்டது. மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ₹1 கோடியே 23 ஆயிரத்து 28 ஆயிரத்து 994 நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 2022-2023-ம் நிதியாண்டில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பாக அரசுக்கு மொத்தம் ₹4 கோடியே 37 லட்சத்து 48 ஆயிரத்து 505 வரி, அபராதம் மூலம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை