வரதட்சணையாக நகை, பணம் கேட்டு கணவன் சித்ரவதை; மனைவி சாவு

ஆவடி: பணம், நகை கேட்டு கணவன் சித்ரவதை செய்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்தார். அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சக்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (33). இவர் ஆவடி அருகே காட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யாகுமாரி (27). கடந்த ஐந்து வருடத்துக்கு முன் திருமணமான தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன. திருமணத்தின்போது வித்யாகுமரிக்கு அவரது பெற்றோர் 13 சவரன் நகைகள் மற்றும் பைக் வாங்குவதற்கு ரூ.65 ஆயிரம், சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.இந்த நிலையில், மூர்த்தி மேலும் பணம், நகை வேண்டும் என்று கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்ததுடன் அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் மூர்த்தி வேலைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து குழந்தைகளுடன் இருந்த வித்யாகுமாரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து வித்யாகுமாரின் தாய் மீனாட்சி அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ‘எனது மகள் வித்யாகுமாரியிடம் கணவன் மூர்த்தி பணம் கேட்டு அடித்து உதைத்துள்ளார். இதன்காரணமாகத்தான் என் மகள் தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்புக்கு காரணமான கணவர் மூர்த்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வித்யாகுமாரிக்கு திருமணமாகி 5ஆண்டுகள் ஆவதால் அம்பத்தூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்