மதுரை, ஜூன் 10: வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது: மண்ணின் தன்மைக்கேற்ப பயிரை தேர்ந்தெடுத்து மகசூல் அதிகம் பெறவும், உரச்செலவு தவிர்க்கவும் மண் பரிசோதனை அவசியம். எனவே மதுரையில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப சாகுபடியை பரிந்துரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மண்ணில் உள்ள உப்பின் நிலை, களர், அமில நிலை, சுண்ணாம்பு சத்துகளின் நிலை அறிந்து மண்ணை சரி செய்தால் மகசூல் அதிகரிக்கும். இந்த மண் பரிசோதனைக்காக நிலத்தில் தரிசாக உள்ள 5 வெவ்வேறு இடங்களில் ஆங்கில எழுத்தின் ‘வி’ வடிவத்தில் நிலத்தை வெட்ட வேண்டும்.மேல் மண்ணை அகற்றிய பிறகு, குச்சியால் 10 செ.மீட்டர் ஆழத்திற்கு மண்ணை தோண்டி எடுத்து அதை நான்காக பிரிக்க வேண்டும். அதில் இரு பிரிவு மண்ணை அரைகிலோ அளவு எடுத்து பாலிதீன் பையில் நிரப்பி, பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மதுரையில் 8,500 மண் மாதிரிகளும், மற்ற திட்டத்தின் கீழ் 1600 மண் மாதிரிகளும் இலவசமாக பரிசோதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 13 வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் இதன் மூலம் பயன் பெறலாம். இவ்வாறு கூறினார்.