திருத்தணி: கொண்டாபுரம் கிராமத்தில் தனது விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது ஒருவித விஷ பூச்சி கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். திருத்தணி அருகே சிவாடா ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தண்டபாணி (60). இவர் நேற்றுமுன்தினம் தனது விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அவரது காலில் ஏதோ ஒன்று கடிப்பதை உணர்ந்தார். அந்த இடத்தில் பார்த்தபோது பாம்பு உள்பட எதுவும் காணப்படவில்லை. இதன்பிறகு வீட்டுக்கு வந்த தண்டபாணி, கடித்த இடத்தில் அதிக வலி இருப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி உள்ளார். இதையடுத்து அவரை உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை தண்டபாணி பரிதாபமாக பலியானார். இது குறித்து, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….