பெரியகுளம்:பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கும்பக்கரை, கருங்கல்பாறை, தொண்டகத்தி, காடுவெட்டி, கல்லவாசல், செலும்பாறு, முருகமலை உள்ளிட்ட பகுதியின் வனப்பகுதியை ஒட்டிய விளை நிலங்களில் காட்டுமாடுகள் விளை பொருட்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அகழி அமைத்து வன விலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்ததால், 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழிகள் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த அகழியால் வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு செல்வதை தடுக்கும்படியாக இல்லாமல் இருந்ததால், பல லட்சம் ரூபாய் பயன் இல்லாது போனது. இதனை தொடர்ந்து விவசாயிகள் அமைக்கப்பட்ட அகழிகளை மறு சீரமைக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அகழிகளை மீண்டும் தோண்டி மண் குவியல்களை அகற்றி சீரமைப்பு செய்தனர். ஆனால், அகழியை மறு சீரமைப்பு என்ற பெயரில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அகழிகளை மறு சீரமைப்பு செய்த பணிகளை ஆய்வு செய்து, வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுவதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….