வத்திராயிருப்பு, அக்.15: சாலை வசதி கேட்டு வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். வத்திராயிருப்பு அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு காயிதே மில்லத் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் மழைக்காலத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும், மழை பெய்தால் சேறும் சகதியுமாக சாலை ஆவதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கூறி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.