வணிக வரித்துறையில் வரி ஏய்ப்புகளை தடுக்க ஐடி வல்லுநர்களை ஆய்வுக்கு பயன்படுத்தலாம்: ரூ37 லட்சம் நிதி ஒதுக்கி அரசாணை

சென்னை: வணிக வரித்துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது தகவல் தொழில் நுட்பம் மற்றும் மென்பொருள் வல்லுநர்களை பயன்படுத்திக் கொள்ள நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: வணிக வரித்துறை அமைச்சர் அறிவித்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தவும், வணி வரித்துறையில் தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ள தகவல் தொழில் நுட்பம் மற்றும் மென்பொருள் வல்லுநர்களை பயன்படுத்திக் கொள்ள வணிக வரித்துறை ஆணையர், அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த துறையின் சார்பில் மேற்கண்ட பணிகளை செய்ய வசதியாக டெண்டர் முறையில் முகவர்கள், நிறுவனங்களை அமர்த்திக் கொள்ளவும், ஓராண்டுக்கு சேவையாற்றும் வகையிலும்,  மேலும்,  வணிக வரித்துறை மற்றும் குறிப்பிட்ட மென்பொருள் நிறுவனங்களுடன் இரண்டு  ஆண்டுக்கான  ஒப்பந்தம் செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவினங்களாக ரூ37 லட்சத்து 99 ஆயிரத்து 600  ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். இதன்படி, ஓராண்டுக்கான உத்தேச செலவினம் என்பது ரூ16 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி ரூ2 லட்சத்து 89 ஆயிரத்து 800 சேர்த்து ரூ18 லட்சத்து 99 ஆயிரத்து 800ம், இரண்டு ஆண்டுகளுக்கான உத்தேச செலவினம் ரூ16 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் ரூ2 லட்சத்து 89 ஆயிரத்து 800 ஜிஎஸ்டி சேர்த்து ரூ18 லட்சத்து 99 ஆயிரத்து 800ம் சேர்த்து ஆக மொத்தம் ரூ37 லட்சத்து 99 ஆயிரத்து 600 ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வணிக வரித்துறையின்  ஆணையரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலித்த அரசு, ஆணையரின் கருத்துருவை ஏற்று நிர்வாக மற்றும் நிதி அனுமதியாக ரூ37 லட்சத்து 99 ஆயிரத்து 600ஐ தகவல் தொழில் நுட்பம் மற்றும் மென்பொருள் வல்லுநர்களை மூன்றாம் நபராக 2 ஆண்டுகளுக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி ஆணையிடப்படுகிறது…

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை