சென்னை: வணிகவியலில் பயிற்சி பட்டயப் படிப்பு மற்றும் வணிகவியல் பயிற்சி கணினி பயன்பாடுகள் பட்டயப் படிப்பு ஆகியவை படித்து வரும் மாணவர்களை நேரடியாக பி.காம் இரண்டாம் ஆண்டில் சேர்க்க வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: 2022-2023ம் ஆண்டில் நேரடியாக பி.காம் 2ம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வணிகவியலில் பயிற்சி பட்டயப் படிப்பு, வணிகவியலில் பயிற்சி கணினிப் பயன்பாடுகள் பட்டயப்படிப்பு முடித்த மாணவர்கள் கல்லூரிகளில் நேரடியாக பி.காம் 2ம் ஆண்டில் சேர்க்க வேண்டும். இது குறித்து அனைத்து மண்டல இயக்குநர்களின் மூலம் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 2022-2023ம் ஆண்டின் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளிலும் மாணவர் சேர்க்கை குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில கல்லூரிகளில் பி.காம் 2ம் ஆண்டில் நேரடி சேர்க்கை நடைபெறவிலலை என புகார்கள் வந்துள்ளன. எனவே, பிகாம் 2ம் ஆண்டில் மேற்கண்ட பட்டயப் படிப்பு முடித்த மாணவர்களை சேர்க்க வேண்டும் என அந்தந்த கல்லூரி முதல்வர்களுக்கு மண்டல இணைய இயக்குநர்கள் தெரிவிக்க வேண்டும். …