வெள்ளக்கோவில், பிப்.28: வெள்ளக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் குடும்பத்துடனும் தனியாகவும் வந்து தங்கி இப்பகுதியில் உள்ள நூல் மில்லிகளில் வேலை செய்து வருகின்றனர். வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சத்ருதன்குமார் (24) என்பவர் மில் வளாகத்தில் தங்கி வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி மற்றும் மகன் சொந்த ஊரில் உள்ளனர். இந்நிலையில் மனைவி, மகன்களை பிரிந்து இருந்ததால், ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மில் வளாகத்தில் தங்கி இருக்கும் அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதை அறிந்த மற்ற தொழிலாளர்கள் சத்ருதன்குமாரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சத்ருதன்குமார் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.