திருவேங்கடம்,செப்.6: சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகள போட்டி குருவிகுளம் கோபால் நாயக்கர் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. இதில் 46 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இதில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பங்கேற்ற மாணவ- மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வென்றனர். குறிப்பாக ஆண்கள் பிரிவில் 200 புள்ளிகளும், பெண்கள் பிரிவில் 156 புள்ளிகளும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். ஜூனியர் மாணவர்கள் பிரிவில் சதீஸ்வரன், சீனியர் பிரிவில் சந்தோஷ், சூப்பர் சீனியர் பிரிவில் சஞ்சய் மதீஸ் ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். இதேபோல் மாணவிகள் ஜூனியர் பிரிவில் மனோ வைஷாலினி, சீனியர் பிரிவில் கயல்விழி ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.