Tuesday, October 8, 2024
Home » வடமேற்கு டெல்லியில் ஆடிட்டரை சுட்டுக்கொன்ற 22 வயது வாலிபர் கைது

வடமேற்கு டெல்லியில் ஆடிட்டரை சுட்டுக்கொன்ற 22 வயது வாலிபர் கைது

by kannappan

புதுடெல்லி: வடமேற்கு டெல்லியின் ஆதர்ஷ் நகரில் ஆடிட்டரை கொலை செய்ததாக 22 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். டெல்லியை சேர்ந்த ஆடிட்டர் அனில் அகர்வாலும் அவரது மனைவி அஞ்சுவும் கடந்த மார்ச் 16  ஆம் தேதி காலை நடைப்பயணம் சென்றுவிட்டு ஆதர்ஷ் நகரில் உள்ள கட்டுமானப்  பணி நடைபெறும் இடத்தை பார்வையிட சென்றனர். அங்கு அவர்கள் கட்டிடத்தின் தரை தளத்தில் நின்று கொண்டிருந்தபோது,  ​​ஸ்கூட்டியில் வந்த ஹெல்மெட் அணிந்த குற்றவாளிகள் வீட்டிற்குள் சென்று அங்கிருந்த  அனில் அகர்வால் மீது  திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். குண்டடி பட்டு உயிருக்கு போராடிய ஆடிட்டரை அவரது மனைவியின் உதவியுடன் அங்கிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அனில் அகர்வால் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார், ஐபிசி பிரிவு 302 (கொலை) மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதன்பேரில், சிசிடிவி கேமரா உதவியுடன் குற்றவாளி ஜெய்குமார் சிங் என்பவனை கடந்த ஞாயிறன்று டெல்லி சாராய் ரோகில்லா ஏரியாவில் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதுபற்றி போலீசார் கூறியதாவது: ​​சம்பவம் நடந்த நாளில் அகர்வால் மற்றும் அவரது மனைவியை குற்றவாளி வெள்ளை நிற ஸ்கூட்டியில் பின்தொடர்ந்து சென்று நோட்டமிட்டான். ஹெல்மெட் அணிந்த நபரை சிசிடிவி கேமராவின் மூலம் எங்கள் போலீசார் குழு கண்டுபிடித்தன. இது கொள்ளை முயற்சியின் ஒரு பகுதியாக கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட ஜெய்குமார் சிங், மற்றொரு வழக்கில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 8 ஆம் தேதி படேல் நகரில் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஸ்கூட்டியை திருடி பயன்படுத்தியுள்ளார். சிங் அடிப்படையில் போதை பழக்கத்துக்கு அடிமையானவர். அவருக்கு இந்த கொலை சம்பவத்திற்கு உதவ ஆர்யன் என்பவர் துப்பாக்கியை வாங்கி கொடுத்துள்ளார். இந்த கொலை சம்பவத்துக்கு பின்னர் சிங், டெல்லியை விட்டு வெளியேறி உபி மாநிலம் கொண்டாவில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்று விட்டார். அதனை மோப்பம் பிடித்த போலீசார் கொண்டாவுக்கு சென்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் தேடினர். அப்போது, சிங் அங்கிருந்து மீண்டும் டெல்லிக்கு சென்றுவிட்டதாக தெரியவந்தது. அதையடுத்து டெல்லி வந்த போலீசார் சிங் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த வேளையில் கடந்த ஞாயிறன்று சாராய் ரோகில்லாவில் மடக்கி கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையை கொள்ளையடிக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நடந்து இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு காவல்துறை துணை ஆணையர் (வடமேற்கு) உஷா ரங்னானி கூறினார்….

You may also like

Leave a Comment

12 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi