வடமதுரை அருகே மது போதையில் தகராறு நண்பருக்கு கத்திக்குத்து: இருவர் மீது வழக்கு பதிவு

 

வடமதுரை, ஜூன் 23: வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வீரபுத்திரன்(26)., ஆட்டோ டிரைவர். இவரது நண்பர்கள் அருள்தாஸ், பாலமுருகன், பாபு. கடந்த இரு தினங்களுக்கு முன் இவர்கள் 4 பேரும் திண்டுக்கல்லில் இருந்து சிலுவத்தூர் செல்லும் ரோட்டில் உள்ள அளப்பாரிமேடு என்ற பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் பாலமுருகனுக்கும், பாபுவுக்கும் இடையே தொழில் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீரபுத்திரன் தொழில் சம்பந்தமாக பேச வேண்டாம் என்று அவர்கள் இருவரையும் எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் மற்றும் பாபு ஆகிய இருவரும் சேர்ந்து வீரபுத்திரனை கத்தியால் குத்தி, கம்பால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த வீரபுத்திரனை அருள்தாஸ் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்த சம்பவம் குறித்து வீரபுத்திரன் கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன், பாபு ஆகிய இருவர் மீது வடமதுரை போலீஸ் எஸ்.ஐ கிருஷ்ணவேணி கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்