ஈரோடு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஈரோடு ஜவுளி சந்தையில் வெளிமாவட்ட, வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்ததால் விற்பனை சரிந்துள்ளது. ஈரோட்டில் ஜவுளி சந்தை வாரந்தேறும் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும். இந்த சந்தையானது ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, கனி மார்க்கெட், பழைய சென்ட்ரல் தியேட்டர் பகுதியில் கூடும். இங்குள்ள கடைகளில் ஜவுளி ரகங்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுவதால் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் மட்டும் அல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகளும் அதிகளவில் வந்து ஜவுளிகளை வாங்கி செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகை சீசனின் போது 75 சதவீதம் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று கூடிய ஜவுளி சந்தையில் வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமடைந்ததாலும், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் மதுரை, திருநெல்வேலி, நாகை, தூத்துக்குடி போன்ற வெளிமாவட்ட வியாபாரிகளும், கேரளா, கர்நாடகா மாநில வியாபாரிகளும் குறைந்தளவே வந்தனர். இதனால், ஜவுளி சந்தை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது….