துரைப்பாக்கம்: திருவான்மியூர் எல்.பி சாலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. இதன் அருகில், ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு காவலாளியாக மந்தைவெளியை சேர்ந்த கர்ணன் (42) பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் இவர் பணியில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கர்ணனிடம், ‘‘அவசர வேலையாக செல்கிறேன். எனவே, இந்த பணத்தை எனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்து விடுங்கள்,’’ என்று கூறி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 3 மற்றும் 500 நோட்டுக்கள் 4 என மொத்தம் 8 ஆயிரம் ரூபாய் மற்றும் தனது வங்கி கணக்கு எண்ணையும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இதன்பிறகு காவலாளி, அந்த பணத்தை டெபாசிட் மிஷினில் செலுத்த முயன்றார். ஆனால், பணத்தை அந்த மிஷின் ஏற்கவில்லை. இதுகுறித்து, வங்கி மேலாளர் மனீஷிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து, அவர் அந்த பணத்தை வாங்கி பரிசோதித்து பார்த்தபோது அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். …