லால்குடி,டிச.24: லால்குடி நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை செளந்தரபாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் துரைமாணிக்கம் தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலகுரு, நகராட்சி கமிஷனர் குமார், நகராட்சி துணை தலைவர் சுகுணா ராஜ்மோகன், நகராட்சி பொறியாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர்.
முகாமில் நகராட்சியின் 7 முதல் 12 வார்டு பகுதி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். இதில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை உட்பட 13 துறையைச் சார்ந்த 220 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என நகராட்சி கமிஷனர் குமார் தெரிவித்தார். இம்முகாம் வரும் 27 ம் தேதி 13 முதல் 18 வார்டுகள் வரையும், 29ம் தேதி, 19 முதல் 24 வார்டுகள் வரை நடைபெறவுள்ளது.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம், மின்வாரிய செயற் பொறியாளர் அன்பு செல்வன், உதவி செயற் பொறியாளர் கணேசன், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நகர திட்டமிடல் பொறியாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.