திருவள்ளூர்: நிலத்தை அளவீடு செய்து தருவதற்காக ₹ 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சர்வேயருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹20 ஆயிரம் அபராதம் விதித்து திருவள்ளூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி வேலரஸ் தீர்ப்பு வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூரைச் சேர்ந்தவர் கணேசன் (57). இவர் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பிர்க்காவின் சர்வேயராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (49). இவர் பட்டா உட்பிரிவு பெயர் மாற்றத்திற்காக நிலத்தை சர்வே செய்வதற்காக சர்வேயர் கணேசனை அணுகியுள்ளார். இதற்காக சர்வேயர் ₹2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக ரவி சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் ரவி கடந்த 2.3.2009 அன்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை கணேசனிடம் அளித்த போது மறைந்திருந்த போலீசார் கையும், களவுமாக கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை சிறப்பு வழக்குரைஞர் அமுதா ஆஜராகி வாதாடினர். இந்த நிலையில் இறுதிக் கட்டமாக தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி வேலரஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சர்வேயர் கணேசனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்….