சென்னை: கொரோனா நிவாரண நிதியான 2வது தவணை 2,000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் நாளை முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன், கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண தொகையாக 4,000 ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2,000 ரூபாய் மே 10ம் தேதி முதல் வழங்கப்பட்டது. 2ம் தவணையாக 2,000 ரூபாய் நாளை முதல் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் பருப்பு, புளி உள்ளிட்ட 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு கடைகளிலும் நாள் ஒன்றுக்கு 75 முதல் 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார். இம்மாதம் இறுதிவரை இப்பொருட்களும், 2வது தவணை நிதியும் வழங்கப்படும் என்பதால் மக்கள் அவசரமின்றி பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் கூறியிருக்கிறார். 14 வகை மளிகை பொருட்கள் வழங்குதலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இப்பொருட்களை சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.