திருவள்ளூர்: கர்நாடக மாநில எல்லையான விஜயபுரம் அருகே திருவள்ளூர் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் கடந்த 10ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்குன்றம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு லாரியில் 18 டன் ரேஷன் அரிசி கடத்திய பாண்டிச்சேரி பாகூர் தாலுகா ஏரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுந்தர குமார் (41) என்பவரை கைது செய்து லாரி மற்றும் 18 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் இவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனையடுத்து சுந்தர குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் எஸ்பி ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து சுந்தர குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் புழல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். …