மயிலாடுதுறை,பிப்.14: மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அதன் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ரேசன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் விற்பனை செய்யப்படுவதற்கு பதிலாக உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயை ஆகியவற்றை விநியோகம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு உளுந்து பயிருக்கு காப்பீடு செய்து பாதிப்பு ஏற்பட்டு இழப்பீடு வழங்கப்படாமல் விடுபட்ட விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிவக்குமார், கொற்கை சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.