சென்னை: குற்றவாளிகளின் கார்டில் இருந்து ரூ.1 லட்சம் எடுத்த போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ரெம்டெசிவிர் கள்ளச்ச்தையில் விற்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தனிப்படை அமைத்தார். தனிப்படையினர் நடத்திய விசாரணையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர் பாலகிருஷ்ணன்(23) என்பவர் மூலம் திருவல்லிக்கேணி தனியார் மருந்து விற்பனை கடை மூலம் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து பாலகிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கலில்(35), புரசைவாக்கத்தை சேர்ந்த முகமது இர்பான்(24), திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆரிப் உசேன்(32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரெம்டெசிவிர் மருந்து மற்றும் ஏடிஎம் கார்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் லேப் டெக்னீசியன் மணி தலைமறைவாகிவிட்டார். அதைதொடர்ந்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனிப்படையில் இருந்து உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றம் தலைமை காவலர் சரவணக்குமார் ஆகியோர் குற்றவாளிகள் 5 பேரை பிடித்த போது பறிமுதல் செய்த ஏடிஎம் கார்டுகள் மற்றும் அவற்றின் ரகசிய எண்களை பெற்று ₹1 லட்சம் வரை பணத்தை எடுத்து கொண்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார், மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதைதொடர்ந்து குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்த ஏடிஎம் கார்டுகளில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்ததாக கூறப்படும் உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் தலைமை காவலர் சரவணகுமார் ஆகிய 2 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த மோசடி குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி இணை கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளை பிடித்த தனிப்படையில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகிறார். …