Friday, June 28, 2024
Home » ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 2028ல் பரந்தூரில் விமான நிலையம்: தமிழக அரசு அறிவிப்பு

ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 2028ல் பரந்தூரில் விமான நிலையம்: தமிழக அரசு அறிவிப்பு

by kannappan

சென்னை: தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க பரந்தூர் விமான நிலையம் அவசியம். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். எனவே, 2028ம் ஆண்டுக்குள் ரூ.20ஆயிரம் கோடியில் பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில் தடம் விரிவுபடுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கியச் செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2030ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வரிசையில், மாநிலத் தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஏறக்குறைய 24 ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் உருவாக்கத்துக்கான முயற்சிகள் குறித்து பேசப்பட்ட போதிலும், தற்போதுதான் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான இடங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டதுதான் பரந்தூர். ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் 2028ம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த விமான நிலையம் எதிர்கால மக்கள் தொகைப் பெருக்கம், தொழில் துறை வளர்ச்சி ஆகியவற்றை 30 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை சமாளிக்கப் போதுமானதாக இருக்கும். இத்திட்டத்துக்கு ரூ.100 செலவு செய்வதன் மூலம் மாநிலத்துக்கு வருமானமாக ரூ.325 கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.சென்னை தொழில் வர்த்தக சபை (எம்சிசிஐ) பிரதிநிதிகளுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தொழில்துறை வளர்ச்சிக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்பதே அவர்களது கருத்தாக இருந்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக இங்கிருந்து அனுப்ப வேண்டிய சரக்குகள் பெங்களூரு விமான நிலையத்துக்கு மாறியுள்ளன. அதேபோல ஐதராபாத் விமான நிலையமும் தமிழக வாய்ப்புகளை தட்டிப் பறித்துள்ளது. இந்த இரு விமான நிலையங்களின் ஆண்டு வளர்ச்சி 17 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், சென்னை விமான நிலையம் பின்தங்கியதற்கு காரணம் புதிய விமான நிலையத்தை உருவாக்காததே ஆகும். ஏற்கனவே இயங்கிவரும் சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த முயற்சிக்கும்போது அதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. குறிப்பாக விரிவுபடுத்த போதிய நிலம் சுற்றுப் பகுதிகளில் கிடையாது. ஏனெனில் ஒருபக்கம் அதிக அளவில் வளர்ந்துவிட்ட குடியிருப்பு பகுதிகள், மற்றொரு பகுதியில் ராணுவ பயிற்சிக் கல்லூரி வளாகம். மேலும் இன்னொரு பக்கமுள்ள அடையாறு கால்வாய் பகுதியிலும் விரிவுபடுத்த இயலாது. இதனால் விரிவாக்கப் பணிகள் ஓரளவோடு நின்று போனது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக பயணிகள் போக்குவரத்து உள்ள விமான நிலையங்களில் 6வது இடத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளது. ஒரு நாளைக்கு 400 விமானங்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன. இதன்படி ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாளும் அளவுக்குத்தான் இந்த விமான நிலையம் உள்ளது. தற்போது இங்கு மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகளால் அதிகபட்சம் 3.5 கோடி பயணிகளை கையாளும் அளவுக்கே அது விரிவடையும். இந்த பணிகள் முடிவடைய 7 ஆண்டுகளாகும். அப்போது அதிகரிக்கும் பயணிகள் போக்குவரத்தை கையாள இந்த விமான நிலையம் போதுமானதாக நிச்சயம் இருக்காது. புதிதாக அமைக்க திட்டமிட்டுள்ள பரந்தூர் விமான நிலையத்தில் அதிக பயணிகள் பயணிக்கும் பெரிய ரக ஜெட் விமானங்களை தரையிறக்க முடியும். 600 பயணிகள் பயணிக்கும் பெரிய ரக விமானங்களை கையாளும் திறன் பெறும்போது சர்வதேச அளவிலான பயணிகள் வரத்து அதிகரிக்கும். பிற நாடுகளிலிருந்து சென்னைக்கு வர விரும்பும் பயணிகள் நேரடியாக சென்னையில் தரையிறங்க முடியும். தற்போது பெங்களூரு அல்லது டெல்லியிலிருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்துக்கு மாற வேண்டிய சூழல் உள்ளது. இதை தவிர்க்க முடியும். சென்னை நகரிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கான பயண தூரம் அதிகபட்சம் 54 நிமிடமாக உள்ளது. அதுவே பரந்தூராக இருப்பின் 73 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்ற கருத்தை புறந்தள்ள முடியாது. இதற்காக மெட்ரோ ரயில் தடமும் விரிவுபடுத்தப்படும். அப்போது பயண நேரம் 1 மணி நேரமாக குறையும். அனைத்துக்கும் மேலாக சரக்குகள் கையாள்வது அதிகரிக்கும்போது தொழில்துறையினருக்கு அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்புகள் பெருகும். தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், 2வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து அதை நோக்கிய செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.* இந்த இலக்கை 2030ம் ஆண்டிற்குள் எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியுள்ளது.* மாநில தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது….

You may also like

Leave a Comment

16 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi