திருவொற்றியூர்: மணலி புதுநகர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ₹15 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நேற்று மாலை தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்தது. இதனால் பூண்டி ஏரியில் திறந்து விடப்பட்ட உபரிநீர், கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி, வெள்ளிவாயல் அருகே ஆற்றின் கரை பலவீனமாக இருந்ததால், அதன் வழியே வெள்ளிவாயல், விச்சூர் பகுதி வழியே வெளியேறியது. இந்த வெள்ளநீர் மணலி புதுநகர் அருகே வடிவுடையம்மன் நகர், சடையங்குப்பம், இருளர் காலனி பகுதி குடியிருப்புகளில் புகுந்தது. இதனால் அங்கு வசித்த மக்களின் வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமாகின. இதுகுறித்து தகவலறிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, கொசஸ்தலை ஆற்றை தூர்வாரி சீரமைத்து, அதன் கரையை பலப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, தமிழக நீர்வளத்துறை சார்பில், தற்போது ₹15 கோடி மதிப்பில் கொசஸ்தலை ஆற்றில் சுமார் 7 கிமீ தூரத்துக்கு தூர்வாரி, அதன் கரைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.இந்நிலையில், மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயல் பகுதியில் நடைபெற்று வரும் கொசஸ்தலை ஆற்றில் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை நேற்று மாலை தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெற்று வரும் பணிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், அப்பணிகளை பருவமழை துவங்குவதற்கு முன் விரைந்து முடிக்க வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டார். இந்த ஆய்வில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, அதிகாரிகள் முரளிதரன், பொன்ராஜ், காந்திமதி நாதன், பொதுப்பணி திலகம், அருண்மொழி, சுந்தரம், கவுன்சிலர்கள் நந்தினி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….
ரூ.15 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி தீவிரம்; தலைமை செயலாளர் ஆய்வு
previous post