சென்னை: சென்னை அண்ணாநகரில் ஒரு கோடியே 65 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்திருந்த பிரபல மருத்துவமனைக்கு வருவாய்துறை அதிகாரிகள் எச்சரிக்கை பேனர் வைத்தனர். சென்னை அண்ணா நகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் பிரபல நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் முறையாக சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட கட்டிடங்களில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும்படி பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவிப்பு பேனர் வைத்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள ஒரு பிரபல மருத்துமனை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு கடந்த 2001ம் ஆண்டு முதல் ₹1 கோடியே 65 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்துள்ளது. இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், நோட்டீஸ் வழங்கியும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மாலை அண்ணா நகர் 8 மண்டல உதவி வருவாய்துறை அலுவலர் ரவிசந்திரன் மற்றும் உரிமம் ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையில் கொண்ட சுமார் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மருத்துவமனை கட்டடத்திற்கு வரி பாக்கி தொகை எவ்வளவு உள்ளது என்பதை குறிப்பிட்டு எச்சரிக்கை பேனர் வைக்க சென்றனர். அப்போது இதனை பார்த்து கொண்டிருந்த மருத்துவமனை ஊழியர்கள் எச்சரிக்கை பேனர் வைக்க கூடாது என வருவாய்துறை அதிகாரிகளிடம் பல மணிநேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எச்சரிக்கை பேனரை அதிகாரிகள் வைத்து விட்டு அங்கிருந்து சென்றனர்….