குளச்சல்: பனைமரத்தினை வாழ்வாதாரமாக கொண்ட ரீத்தாபுரம் பேரூராட்சி பகுதிகளில் தற்போது பனைமரம் வேகமாக அழிந்து வருகிறது. \”நீங்க இடம் தாங்க, நாங்க பனைமரம் நடுகிறோம்\” என்ற தலைப்பை அடிப்படையாக கொண்டு கோட்டாறு சமூக சேவை சங்கத்தின் கண்டர்விளாகம் கிராம முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 125க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து குன்னங்கல், சலேட்நகர், பனவிளை ஆகிய பகுதிகளில் 4200 பனை விதைகள் நட்டனர்.
ஏற்கனவே மிடாலக்காடு பகுதிகளில் 7000க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்திருக்கின்றனர். கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரும்மாங்குழி பகுதியில் உள்ள கக்குளத்தில் அழிந்து வரும் மரங்களான புன்னை, இலுப்பை, நாவல், பூவரசு, தண்ணீர் காய் மரம், மகிழம் ஆகிய மர விதைகளை நட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் 10000க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஊன்றி உள்ளனர்.
இந்நிகழ்ச்சிகளில் ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ், கோட்டாறு சமூக சேவை கிராம முன்னேற்ற சங்க இயக்குனர் முனைவர் நித்திய சகாயம், சங்க அமைப்பாளர் தீபா ஆகியோர் கலந்து கொண்டனர். பனை விதைகள் சேகரித்து அனைத்து நிகழ்வுகளையும் பெண்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் ஷீஜா, ஜெயமேரி மற்றும் உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.