ராமேஸ்வரத்தில் சீரான மின் விநியோகம் கோரி போராட்டம்

 

ராமேஸ்வரம், ஜூன் 2: ராமேஸ்வரம் நகராட்சியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மண்டபம் துணை மின்நிலையத்திலிருந்து பாம்பன் சாலை பாலம் வழியாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பல மணி நேரத்துக்கு மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவாகியும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செல்போன்களில் டார்ச் விளக்குகளை எரியவிட்டு முழக்கமிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. பின்னர் சில மணி நேரத்தில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. அதன்பிறகே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு