ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்த கத்தாரிகுப்பத்தில் டயர் கம்பெனி இயங்கி வருகிறது. கம்பெனியில் இருந்து வெளியேறும் கரும்புகையால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுதொடர்பாக புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று பொன்னை- கத்தாரிக்குப்பம் கூட்ரோடு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி பூரணி, இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சிப்காட் எஸ்ஐ சிதம்பரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டயர் கம்பெனியை உடனடியாக மூடாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் எனக்கூறி கோஷம் எழுப்பினர். அப்போது போலீசார் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், சாலை மறியலை கைவிடுமாறு பொது மக்களிடம் கூறினர். ஆனால், பொதுமக்கள் மறியலை கைவிடமாட்டோம் எனக்கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது….