பூந்தமல்லி: பெங்களூரில் இருந்து நேற்று காலை 6 மணி அளவில் சதாப்தி அதிவிரைவு ரயில் சென்னை சென்ட்ரல் நோக்கி புறப்பட்டது. இதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர் என ஏராளமானோர் பயணித்தனர். நேற்று காலை 10 மணிக்கு இந்த ரயில், ஆவடி ரயில் நிலையம் வந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் விடியவிடிய கொட்டி தீர்த்த மழை காரணமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மழைநீர் தேங்கியது.
இதையடுத்து, சதாப்தி அதிவிரைவு ரயில் ஆவடியில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
இந்நிலையில், அங்கிருந்த ரயில்வே அலுவலர்கள் அந்த ரயிலில் வந்த பயணிகளை பத்திரமாக கால் டாக்சி, ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், ஆவடியில் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.