சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.நடிகர் ரஜினிகாந்த், கடந்த 25ம் தேதி டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விருது விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில் அவருக்கு, திரையுலக சாதனைகளை பாராட்டி தாதா சாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார். இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியை சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றார். பின்னர் சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் ரஜினி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தலைச்சுற்றல் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து எங்களது மருத்துவ நிபுணர் குழு அவரை பரிசோதனை செய்தது. இதையடுத்து ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை அவருக்கு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் உடல் நலம் தேறி, நலமுடன் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினி குடும்பத்தினர் கூறும்போது, ‘ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை கடவுள் அருளால் நல்லபடியாக செய்து முடிக்கப்பட்டது. விரைவிலே அவர் வீடு திரும்புவார்’ என்றனர்.முதல்வர் நலம் விசாரிப்புதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்’ என கூறியுள்ளார்.ரஜினி விரைவில் குணமடைய விரும்புகிறேன் : கமல் டிவிட்தமிழ் திரையுலகில் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். நேற்று கமல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் என் இனிய நண்பர் ரஜினி, விரைவில் குணமடைந்து, பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்….