கடலூர், செப். 11: கடலூரில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சிறுவனின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி போக்குவரத்து போலீசார் அனுப்பி வைத்தனர். கடலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோர் கடலூர் பாரதி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவனை நிறுத்தி ஆவணங்களை கேட்டனர்.
இதில் அந்த சிறுவனுக்கு 16 வயதே ஆவதும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதன் பின்னர் அந்த சிறுவனை போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து
வரவழைத்தனர். பின்னர் அந்த சிறுவனின் பெற்றோரிடம் 18 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட கொடுக்கக் கூடாது, 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு ஓட்டுநர் உரிமம் எடுத்த பிறகு மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். இதன் பின்னர் வழக்கு பதிவு செய்து, சிறுவனை பெற்றோருடன் போக்குவரத்து போலீசார் அனுப்பி வைத்தனர்.