மோடி 26ம் தேதி தமிழகம் வருகை.! ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.! நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த திட்டம் சென்னை

சென்னை: பிரதமர் மோடி வருகிற 26ம் தேதி தமிழகம் வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அப்போது இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா கடந்த ஜனவரி 12ம் தேதி நடைபெற இருந்தது. இதில் கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்துவைக்க பிரதமர் மோடி ஜனவரி 12ம் தேதி தமிழகம் வரவிருந்தார். விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. அரசு நிகழ்ச்சிகளைத் தாண்டி அன்றைய தினத்தில் தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்த பொங்கல் விழா உள்ளிட்டவற்றிலும் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருந்தார். ஆனால், அப்போது அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பாஜக நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள மாட்டார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே தெரிவித்தார். அதேபோல் பிரதமரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் வரும் 26ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய  நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க அவர் தமிழகம் வருகிறார். சென்னை வரும்  பிரதமர் மோடியை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசுகிறார்.  இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில், ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பெங்களூரு-சென்னை 4 வழி விரைவுச்சாலையின் 3ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் அமைய உள்ள மல்ட்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா, ஒசூர்-தருமபுரி இடையேயான 2ம் மற்றும் 3ம் கட்ட நெடுஞ்சாலை பணிகளுக்கும் மீன்சுருட்டி-சிதம்பரம் இடையிலான புதிய சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இது  தவிர, மத்திய நகர்ப்புற வீட்டுவசதித்துறை, மத்திய பெட்ரோலியம் மற்றும்  இயற்கை எரிவாயு துறை, ரயில்வே துறையின் சார்பில் முடிக்கப்பட்டுள்ள பணிகளை  நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி. மதுரவாயல் மற்றும் துறைமுகம்  பறக்கும் சாலை திட்டம், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி வரையிலான கிழக்கு  கடற்கரைச் சாலையை அகலப்படுத்தும் திட்டம், போடி முதல் மதுரை வரையிலான ரயில்  சேவை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி  வைக்கிறார். பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஒன்றிய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை