ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அறிவிக்கப்பட்ட நீதிமன்றத்தை வேறுப் பகுதியில் அமைக்க சிலர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மொடக்குறிச்சி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அரசு கடந்த ஆகஸ்டில் உரிமையியல் நடுவர் நீதிமன்றம் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், நீதிமன்றத்தை மொடக்குறிச்சியில் இருந்து 5கி.மீ. தொலைவில் உள்ள எழுமாத்தூரில் அமைக்க அதிகாரிகளும் சில தனிநபர்களும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து வணிகர்கள் கடை அடைப்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். மொடக்குறிச்சி, போலபாளையம், பஞ்சலிங்கபுரம், சாமிநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போதுமான இடம் இருப்பதால் அரசாணை படி மொடக்குறிச்சியிலேயே நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பது போராட்ட காரர்களின் கோரிக்கை. வரும் 15-ம் தேதிக்குள் உரிய அறிவிப்பை வெளியிடாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். …