கோபி,ஜூன்17: கோபி அருகே உள்ள கடத்தூரில் மைனர் பெண்ணை திருமணம் செய்த பெயிண்டர் மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடத்தூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சந்திரகாந்த்(22) என்பவர் காதலித்து வந்துள்ளார். சந்திரகாந்த் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். சிறுமிக்கு தாய் இல்லாத நிலையில், கடந்த ஜூன் 1ம் தேதி சிறுமிக்கும், சாந்திரகாந்திற்கும், அதே பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் சந்திரகாந்தின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் சிறுமிக்கு நடைபெற்ற திருமணம் குறித்து தகவல் அறிந்த நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் வேணி என்பவர் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதில் சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதியானதை தொடர்ந்து, வேணி அளித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி, சப்.இன்ஸ்பெக்டர் மேனகா ஆகியோர் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் சந்திரகாந்த்,அவரது பெற்றோர் வேலுச்சாமி, சுமதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.