சிவகங்கை, மே 4: சிவகங்கை மாவட்டத்தில் மே 1 தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் மே. 1 தொழிலாளர் தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958ன்படி விடுமுறை தினமான மே தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு மே தினத்தன்று விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 55வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.