மேலூர், ஜூலை 22: மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில், ஆடி தபசு உற்சவத்தை முன்னிட்டு, நேற்று முகூர்த்தக்கால் ஊன்றி, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலூர் அருகே தும்பைபட்டியில் உள்ள கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம், சங்கர நாராயணர் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆடித்தபசு விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆடி தபசு விழாவிற்காக நேற்று கோயிலில் வாஸ்து சாந்தி பூஜை, நவக்கிரக ஹோமம், கணபதி ஹோமம், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், முகூர்த்த கால் ஊன்றி, காப்பு கட்டி பக்தர்கள் பலரும் விரதம் துவங்கினர்.
ஆடித்தபசு உற்சவத்தை முன்னிட்டு நேற்று முதல் தினசரி மாலை, சங்கரலிங்கம் சுவாமியும், கோமதி அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவர். மேலும் நேற்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், கோயில் அர்ச்சகர் ராஜேஷ் செய்திருந்தனர்.