சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16ம் தேதி, 17ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி (இன்றும், நாளையும்) நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் தலா 10 செ.மீ., மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஜி பஜார் 9 செ.மீ, பேச்சிப்பாறை 7 செ.மீ, வீரபாண்டி, மானாமதுரை தலா 6 செ.மீ, விருதுநகர், கோவில்பட்டி, அமராவதி அணை, மேட்டூர், குமாரபாளையத்தில் தலா 5 செ.மீ., பெரியகுளம், நன்னிலம் தலா 4 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….