மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

 

தர்மபுரி, ஏப்.7: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சப்கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் செயின்ட் மேரிஸ் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை உள்ளிட்டவற்றை தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சாந்தி, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவர் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மேட்டூர் சப்கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 128 வாக்குச்சாவடி மையங்களில் அடங்கியுள்ள 316 வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் உரிய பாதுகாப்போடு பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

தொடர்ந்து, மேட்டூர் அணையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை, கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, மேட்டூர் சப்கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆய்வின் போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மேட்டூர் சப்கலெக்டர் பொன்மணி, தாசில்தார் விஜி உள்ளிட்ட தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி