மேட்டுப்பாளையம், ஆக.9: மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் விளையாட்டு மாரியம்மன் கோவில் பகுதியைச்சேர்ந்தவர் ஐயப்பன்(43). இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சத்யா (33) என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ஐயப்பனுக்கு எஸ்.எம்.நகர் பகுதியைச்சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிய வரவே சத்யா தனது கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன் மற்றும் காதலி மகேஸ்வரி இருவரும் இணைந்து சத்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் சத்யாவிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இதுகுறித்து நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவன் ஐயப்பன் மற்றும் காதலி மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தகாத உறவை தட்டி கேட்ட மனைவியை தாக்கிய கணவன் மற்றும் காதலி கைது செய்யப்பட்ட சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.