சென்னை: மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி குடும்பத்துடன் நேற்று காலை சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டு சென்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி 4ம் தேதி பதவியேற்ற சஞ்சீப் பானர்ஜி கடந்த 10 மாதங்களாக உயர் நீதிமன்றத்தில் ஏராளமான முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். அரசு நில ஆக்கிரமிப்பு, நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். குறிப்பாக கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவர், படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை அப்போதைய தமிழக அரசுக்கு உத்தரவாக பிறப்பித்தவர். நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக மாணவர்களிடம் கருத்து கேட்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தை எதிர்த்து பாஜ மாநில நிர்வாகி கரு.நாகராஜன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இந்த நிலையில் அவரை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். ‘சார்டர்ட் ஐகோர்ட்’ என்ற பெருமை கொண்ட பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. அப்படிப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து 3 நீதிபதிகள் மட்டுமே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு சஞ்சீப் பானர்ஜியை மாற்ற பரிந்துரைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த முடிவை மறு பரிசீலனை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். அதே போல இந்தியாவின் பழமைவாய்ந்த வழக்கறிஞர் சங்கங்களுள் ஒன்றான மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் 31 மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு சஞ்சீப் பானர்ஜியின் இடமாற்ற உத்தரவை மறு பரீசிலனை செய்யக் கோரி கடிதம் எழுதியதோடு சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
…