Friday, July 5, 2024
Home » மேகதாது அணை விவகாரம் எடியூரப்பாவின் அழைப்பை நம்பி பேச்சு நடத்தக்கூடாது: ராமதாஸ் வேண்டுகோள்

மேகதாது அணை விவகாரம் எடியூரப்பாவின் அழைப்பை நம்பி பேச்சு நடத்தக்கூடாது: ராமதாஸ் வேண்டுகோள்

by kannappan

சென்னை: மேகதாது அணை எடியூரப்பாவின் அழைப்பை நம்பி பேச்சு நடத்தக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்ற கர்நாடக முதல்வரின் கோரிக்கையில் எந்த நியாயமும் இல்லை. மேகதாது பகுதியில் அணை கட்டுவதை நியாயப்படுத்த தமிழகத்தில் பவானி ஆற்று பாசனப் பகுதியில் குந்தா, சில்லஹல்லா நீர் மின்திட்டங்கள் கர்நாடகத்தின் ஒப்புதல் பெறாமல் செயல்படுத்தப்படுவதைப் போல, மேகதாது அணை மற்றும் நீர்மின்னுற்பத்தி திட்டத்தையும் அனுமதிக்க வேண்டும் என்று எடியூரப்பா கூறுவது தமிழகத்தை ஏமாற்றும் முயற்சியாகும்.மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதாகும். இப்போதே உபரி நீரை மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் அனுப்புகிறது. புதிய அணையும் கட்டப் பட்டால் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட வராது. இது தான் மறுக்க முடியாத உண்மையாகும். மேகதாது அணையை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கர்நாடகம் அதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் தமிழ்நாட்டை பேச்சுக்கு அழைப்பது வழக்கம்.கர்நாடக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் 2015ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி தம்மை சந்தித்த தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்போதைய கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கேட்டுக்கொண்டதன் பேரில் மேகதாது அணை குறித்து தமிழ்நாடு – கர்நாடகா அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்போவதாக அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். இத்தகைய பேச்சுக்களுக்கு அப்போதே பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதைய தமிழக அரசும் கர்நாடகத்துடன் இதுகுறித்து பேசவில்லை.கடந்த காலங்களில் வீசப்பட்ட அதே வலையைத் தான் இப்போது எடியூரப்பா வீசியிருக்கிறார். மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் தமிழகம் பேச்சுவார்த்தை நடத்தினால் நமக்குதான் பாதிப்பு ஏற்படும். 1970களில் காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக, சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதால், நமக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். தமிழக அரசுடன் பேச்சு நடத்திக் கொண்டே காவிரியின் குறுக்கே 4 அணைகளை கர்நாடகம் கட்டியது.காவிரி பிரச்சனையில் கர்நாடகத்தின் நேர்மையும், அறமும் எத்தகையது என்பதை கடந்த காலங்களில் நாம் கற்ற பாடங்களும், பட்ட காயங்களும் நமக்குச் சொல்லும். அவற்றை நினைவில் கொண்டு மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சு நடத்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விடுத்துள்ள அழைப்பை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை சிறப்பாக நடத்தி காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

4 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi