சென்னை: சன் டி.வியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ என்ற தொடர் மூலம் புகழ்பெற்ற, நடிகை உமா மகேஸ்வரி (40), உடல்நலக்குறைவால் நேற்று காலை மரணம் அடைந்தார்.திருமுருகன் இயக்கிய ‘மெட்டி ஒலி’ தொடரில், திருமுருகன் மனைவியாக விஜி என்ற கேரக்டரில் நடித்த உமா மகேஸ்வரி, தொடர்ந்து சில தொடர்களில் நடித்தார். பிறகு ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘உன்னை நினைத்து’, ‘அல்லி அர்ஜூனா’ ஆகிய படங்களில் நடித்த அவர், மலையாளத்தில் ‘ஈ பார்கவி நிலையம்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். கால்நடை மருத்துவர் முருகன் என்பவரை திருமணம் செய்துகொண்ட பிறகு, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையை கவனித்தார்.அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட உமா மகேஸ்வரி, ஈரோடு சென்று அதற்கான சிகிச்சை பெற்று உடல்நிலை தேறினார். ஆனால், மீண்டும் அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த டி.வி நடிகர், நடிகைகள் பலர் இரங்கல் தெரிவித்தனர். நேற்று உமா மகேஸ்வரியின் இறுதிச்சடங்கு சென்னை காட்டுப்பாக்கத்தில் நடந்தது….