ஆலந்தூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூவரசம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். துணை தலைவர் பிரகாஷ், ஒன்றிய குழு துணை தலைவர் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.கூட்டத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று மனுக்களை பெற்றார். அப்போது அவர் பேசியதாவது: கிராம சபை கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மூவரசம்பட்டு கலைஞர் தெருவில் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் செலவில் சாலை பணி விரைவில் தொடங்கப்படும். சபாபதி நகரில் பூங்கா ரூ.25.87 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது. கங்கா நகர் பூங்காவை சீரமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோகுலம் நகர் 2வது மெயின் ரோடு, கங்கா நகர், ராகவா நகரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ராகவா நகர் 7 மற்றும் 9வது தெருக்களில் சாலை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கொசு மருந்து அடிப்பதில் வார்டு உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும். கால்நடை வளர்ப்பவர்கள் அதை சாலையில் திரியவிடாமல் வீட்டில் கட்டி வளர்க்க வேண்டும். குப்பை கொட்டுவதற்கான இடப் பிரச்னைக்கு தீர்வாக மேடவாக்கத்தில் 16 ஏக்கரில் குப்பை கிடங்கு அமைக்க இடம் பார்த்துள்ளோம். விரைவில் தீர்வு காணப்படும். இதேபோல், பாதாள சாக்கடை திட்டம் உள்பட அனைத்து தேவைகளும் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட ஆட்சி தலைவர் ராகுல் நாத் பேசுகையில், ‘‘இங்குள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டித்தரப்படும். கோகுலம் நகர், சபாபதி நகர், குளக்கரை பகுதியில் உள்ள பூங்காக்க சீரமைக்க ரூ.65 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மூவரசம்பட்டு ஏரி சீரமைக்கப்படும். குப்பைகளை வீட்டிலிருந்து தரம் பிரித்து கொடுக்க வேண்டும். டெங்கு பரவுவதை தடுக்க வீட்டின் அருகே தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்,’’ என்றார். கூட்டத்தில் பரங்கிமலை ஒன்றிய குழு தலைவர் சங்கீதா, பாரதிராஜா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மனோகரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் சதீஷ், வார்டு உறுப்பினர்கள் விக்டோரியா, சதீஷ், பெருமாள் மற்றும் பலர் பங்கேற்றனர்….